Kathai Kathaiyaam

Tuesday, April 04, 2006

ஆனந்த் எழுதிய திடீர் கவிதைக்கு பதிலாய் ஒரு கிறுக்கல் கவிதை:

மேலைநாட்டு மடையர்களுக்கு மொழிதெரியாதென்ற
மிதப்பிலே மிதக்கிறாய்
முதுகுதிரும்பியதும் முணுமுணுக்கிறாய்

திடீரென தொப்பித்தலையனுக்கு தமிழ் தெரியுமென
தெரிந்ததும் திடுக்கிடுகிறாய்
தொப்பித்தலையனிடம தப்பு தப்பென்று
தப்புவாங்கிவிட்டு,
தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெரிக்க ஓடுகிறாய்

...

ஓடுகிறாய், வாழ்வின் எல்லை வரை ஓடுகிறாய்.

...

என்னது? சிக்சரா? நான் பந்தா? பந்தாவெல்லாம் பறந்து பந்தாகிப்பறக்கிராய்.

-

மன்னிக்க.

Tuesday, January 17, 2006

ஆனை வரும் பின்னே, தும்பி வரும் முன்னே!

கனவு கலைந்து, விழித்தும் விழிக்காத விடியற்க்காலையில், ஆனையின் தும்பிக்கைக்கு பெயர்க்காரணம் என்ன, என்று ஒரு குழப்பம். தும்பிப்பூச்சியின் வால் போல வளைவதால் அதற்க்கு தும்பிக்கை என்று பெயர் வந்திருக்கலாம். அல்லது, "தும்பு" என்றால் "முன் பகுதி" என்று ஒரு பொருள் உண்டு - அதனாலும் (முன் பகுதியில் உள்ள கை ஆதலால்) ஏற்பட்டிருக்கலாம். "தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த மாதிரி" என்று பழமொழி கூட உண்டு. இவை இரண்டில் ("தும்பி" அல்லது "தும்பு") எது சரியான பெயர்க்காரணம் என்று குடைச்சல்.

முதலில் தோன்றிய சொல் எது என்று பார்த்தால், தும்பி என்ற சொல் புறனானூற்றுப்பாடலில் உள்ளது நினைவிற்க்கு வந்தது ("கொங்குதேர் வாழ்க்கை" எனத் தொடங்கும்).

முதலில், தும்பிக்கு அந்த பெயர் எப்படி வந்தது, எங்ஙனம் தோன்றியிருக்க முடியும் என்று எண்ணினேன். "தும்பு" + "ஈ" - முன்புறம் ஈயைப்போல் உள்ளதால் இந்தப்பெயர் வந்திருக்க வேண்டும்.

ஆனையாரிடம் திரும்புவோம். தும்பிக்கைக்கு தும்பு+கை என்று பெயர்க்காரணம் கூறினால் பெயர் "தும்புக்கை" என்றல்லவா வர வேண்டும்? தும்பிக்கை என்று அமைவதனால், இது தும்பி போல வளைவதனாலேயே இந்த பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் தமிழ் மக்கள் ஆனையை அறியும் முன்னர் தும்பியை அறிந்திருக்க வேண்டும்.

Tuesday, January 10, 2006

சங்கம் என்னும் ஓர் கட்டுக்கதை
சங்க இலக்கியம் என்று கூறப்படும், கி.மு. 200-க்கும் கி.பி. 200-க்கும் இடையே தொகுக்கப்பட்ட தொல்காப்பியமும், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மிகவும் அருமையான இலக்கியம்தான். ஆனால் இவைகளை படிக்கும் பொழுது ஒரு கருத்து என் கண்ணை உருத்திற்று - இந்த நூல்கள் எதிலுமே "சங்கம்" என்ற சொல் இடம் பெறவே இல்லையே, அது ஏன்? உண்மையாகவே இவை ஒரு அரசனால் கூட்டப்பட்ட கழகத்தில் தொடுக்கப்பட்டிருந்தால், பாடலுக்குப்பாடல் "இன்னார் இயற்றிய பா" என்று எழுதிய தொகுப்பாளர், தொகுப்புக்கு ஒரு முறை "இந்த மன்னன் கூட்டிய கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டன" என்று எழுத மாட்டாரா?

"சங்கம்" என்ற சொல் சங்க கால இலக்கியத்திலேயே இல்லை என்றால், அது எங்கிருந்து வந்தது? சொல்லையும் பொருளையும் பார்த்தால் வடமொழிச்சொல் போல உள்ளது. கி.பி. 900-வாக்கில் இன்னூல்களுக்கு உறை எழுத முற்பட்ட சிலர் இந்த புறளியை கிளப்பி உள்ளனர். இவற்றில் முதற்குற்றவாளி "இறையனார் அகப்பொருள் அந்தாதி" என்னும் ஒரு உறை நூல். இந்த நூலில் தான் "சங்கம்", "குமரிக்கண்டம்", "கடல்கோள்", "பற்றுளி ஆறு" என்ற பல கட்டுக்கதைகள் கட்டப்பட்டுள்ளன. இவையே காலப்போக்கில் பெருகி, தமிழ் மக்களிடையே ஊறிப்போய்விட்டன.